Friday, October 7, 2022

ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்: பயன்பெற ஆட்சியா் வேண்டுகோள்

 

06.10.2022 ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து விதமான மறுவாழ்வு உதவிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்யவும், அரசின் மற்ற துறைகளின் நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அறிந்து கொள்ளவும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இந்த முகாம் வரும் அக்.18 மற்றும் நவ.1-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறாது.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் ஒன்றியங்களில் விவரம்: திமிரி ஒன்றியத்தில் வரும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்.14-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), வாலாஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் அக்.18-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை). (வெள்ளிக்கிழமை), சோளிங்கர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அக்.28-ஆம் தேதியும் காவேரிப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்.21-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை), நெமிலி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் நவ.1-ஆம் தேதியும் (செவ்வாய்க்கிழமை), அரக்கோணம் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரும் நவ.4-ஆம் தேதியும் (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை பதிவு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை பதிவு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

இந்த உதவிகளைப் பெறுவதற்கு ஒவ்வொரு பதிவுக்கும் தனித்தனியாக பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள் பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment