Saturday, December 10, 2022

பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து.


07.12.2022 பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை மாணவர்கள் பாடினர்.

மாற்றுத்திறனாளிகளை சிறப்பிக்கும் நோக்கத்தில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பிரார்த்தனை கூட்டத்தில் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட உத்தரவிடப்பட்டிருந்தது.

காது கேளாதோர் பயன்படுத்தும் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை உருவாக்க கோவை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பூபதி வழிகாட்டுதலின் பேரில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரம், அசோகபுரத்தில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான வீடியோ பதிவு, கடந்த வாரம் மூன்று நாட்கள் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் கோவை குழந்தை ஏசு காதுகேளாதோர் பள்ளி, கோவை மாவட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் காதுகேளாத குழந்தைகளும் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சக மாணவ, மாணவியர்களும் கலந்து கொண்டு, சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்தை பாடினர்.

பாடலின் வீடியோ பதிவை, கடந்த 3ம் தேதி பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் சென்னையில் வெளியிட்டார். இப்பாடல் வைரலாக பரவியது. ஏறத்தாழ, 12 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலை பார்வையிட்டனர். பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சைகை மொழியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதில், மாற்றுத்திறன் குழந்தைகளுடன் சக மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment